ஊஞ்சல்
ஊஞ்சலை கடக்கும் போதெல்லாம்
மனம் சிறுபிள்ளையாய்
ஊஞ்சலாடிவிட்டுத்தான் வருகின்றது.!.
குழந்தைகளின் கலகல சிரிப்போசையும்
ஊஞ்சலின் கிரீச்சிடும் ஓசையும்
என்னதான் பேசியதோ .,
உற்சாகமாய் ஆடுகிறது ஊஞ்சல்!..
சிறியவர் ஊஞ்சலில் பெரியவர் ஆடும்பொழுது
கிளைகளில் ஆடும் குரங்குகள்
என் நினைவிலாடுகின்றன.
குழந்தைகள் யாருமற்ற பொழுதில்
காற்று சற்று ஆடி மகிழ்கின்றது..
ஊஞ்சலும் காற்றின் வழியே
குழந்தைகளுக்கு தூதனுப்பி காத்திருகின்றது!.
சில ஆடாத ஊஞ்சல்கள்
பறவை எச்சங்களால் காயப்பட்டு
மலரும் நினைவுகளால் மெல்ல ஆடிக்கிடக்கின்றன!.
ஊஞ்சல் கற்றுத்தருகின்றது குழந்தைகளுக்கு
வாழ்வில் சீராக வாழ கற்றுக்கொடுக்கின்றது.
அருகருகே இரு ஊஞ்சல்கள்
இருந்துவிட்டால் போதும்
யாருமற்ற பொழுதில் குழந்தைகளின்
ஞாபக ங்களை பேசி களிக்கின்றன!..
யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் ஊஞ்சல்களை,
குழந்தைகளுக்கு சொல்லவேண்டிய கதைகளை
ஒருமுறை மனதுக்குள் சொல்லிப்பார்க்கட்டும்!.