வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சுதேசி

சுதேசி



டாலர் நம்மை விழுங்கிவிட்டது
பரபரப்பாய் அலைந்து
பணத்தைத் தேடி நம்மை
தொலைத்து விட்டோம்!

சுதேசி பிரச்சாரகர்களின் 
விதேசி மகிழுந்து ஊர்வலம்
தைக்கப்பட்ட வாய்களோடு
பாமாலை பாடுகிறது

சாதியொழிப்பு போராட்டத்தில்
திராவிடம் அழிந்து ஆரியம் தளிர்க்க
திராவிட தலைவர்களின்
மஞ்சள் துண்டு ஊர்வலம்!

புரட்சிக்காரர்கள்
தீவிரவாதிகளாக காட்டில்.,
கொள்ளைக்காரர்கள்
அரசியல்வாதிகளாக நாட்டில்.!

மன்னராட்சி அழிந்து
மக்களாட்சி மலர்ந்த தேசம் .,
நாட்டை ஆள இங்கு
புதிய புதிய மன்னர்கள்!

அதிகாரங்கள் நொறுக்கும் விரல்கள்
ஐந்து வருடங்கள் துருபிடித்து கிடக்க.,
தொலைத்த நம்மை அடிமையாய் கண்டு
மீட்டெடுத்து மீண்டும் தொலைத்துவிட்டோம்!.


தொட்டில் குழந்தையின் தாலாட்டு !...

தூளியிலே போட்டு என்னை
தாலாட்ட வேண்டாம் அம்மா!

மடியினில் ஏந்தி எனக்கு
பாலூட்ட வேண்டாம் அம்மா!

போகையிலும் - வருகையிலும் என்னை
சுமந்து திரிய வேண்டாம்  அம்மா!

காலிலே கிடத்தி என்னை சுடுநீரில் 
குளிப்பாட்ட வேண்டாம் அம்மா!

பொட்டிட்டு  பூவிட்டு புத்தாடை எனக்கு
அணிவிக்க வேண்டாம் அம்மா!

உன் பார்வையினோரம் என்னை ஒரு
கிழிந்த பாயிலேனும் கிடத்தி
பார்த்திருக்கக் கூடாதா அம்மா?!

பெண் என்று என்னை அநாதையாக்கிவிட்டு 
வீதியிலே போட்டு விட்டாய் .,

யாரேனும் கண்டெடுக்கும் முன்பு என்னை 
ஒரு பூனை கடித்து தின்னலாம் .,
தெரு நாய்கள் குதறலாம்.,
கொடும் வெயிலும் சுடலாம்., 
கடும் மழையிலும் நனையலாம்.,
உன் மடி தரும் பாதுகாப்பை
இந்த தெரு தருமா அம்மா?!

பயங்கொள்ளும் கனவு கண்டு 
வீறிட்டு நானழுதால் 
யாரென்னை அள்ளி எடுத்தணைத்து 
ஆற்றித் தேற்றுவார் அம்மா?!

பசி கொண்டு நானழுக 
எந்த பால்மடி ஊறி எந்தன் 
பசி தீர்த்து மகிழுமம்மா?!

வளரும் பொழுதினிலே அநாதை என்றென்னை 
யாரேனும் இடித்துரைக்க நேரலாம்,

முறை தவறி பிறந்தவள் என என்னை
பழி கூறி தூற்றலாம் !

என்றோ நீ செய்த கனநேர தவறுக்கு
என்னாயுள் முழுவதும் என்னை
தணலிலே விடுவது ஞாயமா அம்மா?!
குறையுள்ள தாய் ஒருத்தியும்  இல்லையாம்,

உண்மையை சொல் அம்மா.,
நீ தாயா? - பேயா?!
என் வாழ்க்கை பாதையெங்கும்
பெயர் தெரியா அம்மா ..,
முகம் தெரியா அம்மா....
உன் பெயர் தாங்கிய முட்க்கள்தானே!.

நீ பிறவா  நொடிகள் இருந்திருதால்
எத்துனை நலமாய் எனக்கு
இருந்திருக்கும் அம்மா !








புதுப்பி

புதுப்பி 


அடிக்கடி
புரட்டிப் பார்த்து.,
நினைத்துப் பார்த்து.,
படித்துப் பார்த்து.,
என்னதான் புதுப்பித்தாலும் 
இறந்தவனின் நினைவுகளாக
நம் காதல் ! 

பிறந்த நாள்

பிறந்த நாள்


இன்றைய  நாளில்
அன்றொரு நாளில் பிறந்தேனாம்,

நன்று,

என்ன செய்தேன் இந்த உலகிற்கு?!

இத்தனை வருடங்களும்
புகை போல கரைந்ததை
நாட்கள் வீணில் மறைந்ததை
ஊர் கூட்டி கொண்டாடுகிறோம் - கேவலமாய்

இனியாவது - இந்த வருடம்
மரிக்கும் முன்னாவது
செய்வோமா ஏதேனும் நல்லது - உலகுக்கு ?!.

ஒவ்வொரு பிறந்த நாளும்
இறந்தநாளை நினைவூட்டுகின்றது

உறுதி எடுத்தேன் நான் இன்று
நன்மை செய்ய தவறினாலும்
செய்யேன் யாருக்கும் நான் - தீமை!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

இதயத்தின் மௌனம்

இதயத்தின் மௌனம்


என்
இதயத்தின் ஆழத்தில்
உன் காதல் தூங்குகின்றது!

உன்
இதயத்தின் ஆழத்தில்
என் காதல் மரணிக்கின்றது !

என் செவிகளில்
உன் பேச்சும்,
என் இதழ்களில்
உன் பெயரும்!

நீயோ
உன் செவிகளை அடைத்துக்கொண்டு
வார்த்தைகளால் வசை பாடுகின்றாய்!

உன் பிரிவின் துயரத்தை
உன் காதல் உணரா வண்ணம்
என் இதயத்தில் அமைதியாய்
உறங்க வைத்திருகின்றேன் !

நீயோ போய்விட்டாய்

கண் முன்னே உயிர் பிரிவது போல
நீ போய் விட்டாய்

போருக்கு பிந்தைய அமைதியாய்
என் மனம்
மௌன பாடல்களோடு!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

அன்பு காட்டுங்கள்


அன்பு காட்டுங்கள்
 ஷோபனா சின்னதுரை
என் சக மானிடரே
ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்

ஆசை முத்தம் குழந்தைக்கு
அன்பு முத்தம் உடன் பிறந்தோர்க்கு
நேச முத்தம் நண்பருக்கு
காதல் முத்தம் காதலுக்கு
மோக முத்தம் வாழ்க்கை துணைக்கு

முத்தத்தின் மூலமும்   அன்பு காட்டுங்கள்

முத்தம் பிறக்கும்  உதட்டிலிருந்து ஏன்
வசை மொழி கொட்டுகிறீர்கள்?!

உதட்டு முத்தத்தால் உள்ளங்களை இணைக்கலாம்
ஏன் உள்ளங்களை பிளக்கின்றீர்கள் ?!

என் அன்பு மானிடரே
அன்பு காட்டுவதில் முதலாய் இருப்போம்
வஞ்சகம் பேசுதலில்  கடையிலும் கிடவோம்!

வாருங்கள் உலகுக்கு அன்பு காட்டுவோம்!

ஏன்?!


ஏன்?!

மறந்துவிடுகிறேன்


மறந்துவிடுகிறேன்


வாழ்வும் - சாவும்



வாழ்வும் - சாவும்

சனி, 11 பிப்ரவரி, 2012

பகலில் ஒரு இரவு

பகலில் ஒரு இரவு

விழி

விழி

விழி திறக்கையில்  
உன் முகம் காண வேண்டும்

விழித்திருக்கையில்
உன் முகம் நானாக வேண்டும்

மீனுக்கும் - உன்
விழி மீனுக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
இரண்டும் நீந்துகின்றன
மீனுகுணவு - புழு
உன் விழி மீனுக்குணவு - நான்!

உன் விழிகளைப் பற்றி
என் விழி விரிய
எத்தனயோ சொல்லலாம் ...

உன் விழியின்
உண்மை அறிய
என் விழிக்குள் பார்!....

புதன், 8 பிப்ரவரி, 2012

பயணம்

பயணம்


இருவூரிலிருது
ஒருவூர் வந்தேன்

 கருவூரில் வளர்ந்து
வெளியூர் குடி புகுந்தேன்

வெளியூர் வந்தபின்னே
என்னூராய் ஆக்கிக் கொண்டேன்

எண்ணூரில் எத்தனையோ
பயணிகளை நான்
கண்டேன்,
பழகினேன்,
சண்டையிட்டேன்,
சமாதானம் சொன்னேன்,

என்னூரிளிருந்து
மேலூர் செல்லும் நாள் வந்தது

அப்போதுதான்
கீழூர் போகிறாயா?!
மேலூர் போகிறாயா?!
என்று கேட்டார்கள்...

அடடா

இத்தனை நாளும்
எவ்வூர் போவதென்று
எம்முடிவும் எடுக்கவில்லையே!...

திசை கெட்டு
அலைந்து விட்டேன்

எவ்வழி
 நான் செல்லும் வழியென்று
தெரியாமல் விழித்தேன்

தமிழ் முன்னோடி ஒருவன் சொன்னான்

" யாதும் ஊரே
யாவரும் கேளீர் "

என்று நீ வாழ்ந்திருந்தால்
மேலூர் உனது .

இன்றேல் கீழூர்  உனது..






திங்கள், 6 பிப்ரவரி, 2012

முன்னுரை

முன்னுரை



இதைத்தான்
உனக்குத் தரவேண்டுமென்று
நீண்ட நாளாய் விரும்பினேன்.

ஒரு கதை.,
ஒரு கவிதை.,
இதோடு நான்!.

எல்லாம் நன்றாய் இருக்கின்றது
என்று நீ சொல்வாய்.,
என்னையும் சொல்வாயா?!



இதுதான்
கடைசி தீக்குச்சி
எதிர்ப்புக் காற்றை மீறி
எரிகின்றேன்.,
உன்னை பற்றவைத்துக்கொள்!.


இங்கேதான்
உன் வாழ்வை ஆரம்பிக்கப் போகின்றாய் .,
உனக்கு என்ன தேவையோ
தேடி எடுத்துக் கொள்.,
நானும்
கீழேதான் கிடக்கின்றேன்!.


இதை கடைசிவரை படித்துக்கொள்.
நீ படிக்காமல் விட்டுவிட்டாலோ,
அல்லது மறந்துவிட்டலோ
உன் பெருமையும் - அருமையும்
உனக்கு
தெரியாமலே போய்விடும்.


முடித்தவுடன்
மறக்காமல் ஒரு முத்தம்கொடு
என் வரிகளுக்காவது  !.


என்னுள் கையெழுத்திட்டவள்

என்னுள் கையெழுத்திட்டவள்
ப.அலெக்சாண்டர்


தேனீர் அருந்தென்றால்
என் கண்ணீரே
உனக்குப் போதுமென்கின்றாய்.,

வார்த்தைகளோடு போராடலாம்
மௌன உணர்வுகளோடு போராட முடியாது.
நான் உன்னுடன் மௌன
உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றேன்.,

இன்னும் எத்தனை காலம் என்னை
பட்டினி போடப் போகின்றாய்?!

என் உள்ளமும் -  உடலும்
ஒடுங்கிக்கொண்டிருக்கின்றது.,

நீதான் நான்  கேட்கும் கீதம்,
நான் பாடும் சங்கீதம்.

ஆனாலும், நீ எனக்கு வராத ராகம்,.
 என்றாலும் பாடுகிறேன்,
வராமலா போய்விடுவாய்?!...

 நீ

என்னுள் கையெழுத்திட்டவள்,
சற்று அழுத்தமாய் கையெழுத்திட்டாயோ ?!....
என் இதயம் கிழிந்து போனது
உன் ஞாபகங்களை சுமந்து .

உயிரின் பாடல்

உயிரின் பாடல்

உருக்கமான காதற் பாடல்கள்
உன் நினைவினை கீறிவிட்டு
வேடிக்கை பார்கின்றது.
 துயரம் வழிந்தோடுகிறது.,
சில நேரங்களில் நீயும்
பார்த்துப் போகின்றாய்
காதற் பாடல்களே பரவயில்லை!

வாழ்க்கை

வாழ்க்கை

ஷோபனா சின்னதுரை
*வாழ்க்கை
ஒரு வழுக்குப்  பாறை ,
வெகு சிலர்
உச்சத்தில்
மிகப் பலர் 
பள்ளத்தில்.!

* கலவியில்
துவங்கிய பயணம்
கல்லறையில் 
வந்து முடிகிறது!

*இதழின்றி
மலரில்லை,
இதழின்றி
நம் மொழியில்லை ,
மலரும் - மனிதமும்
கடமைப் பட்டவர்கள்
இதழ்களுக்கு!

*பூவின் மொழி
வாசம்,
மனித மொழி
நேசம்!

*வழியெல்லாம் தோழர்கள்,
கரம் குலுக்கும்,
கட்டி அணைக்கும்,
எட்டி மிதிக்கும்,
வெட்டியும் போடும்!

*பருவ வயது
ஒரு இரவு,
தடுமாற்றங்கள் அதிகம்,
இங்குதான்
வாழ்க்கை
பல கிளைகளாக பிரிகிறது.
இந்த
இரவுக்குள்ளே
முடிவெடுக்க வேண்டும்.
இன்றேல்
பகலே இல்லாமல்
போகக்கூடும்!

*சிறகுகள் கட்டி
சிறகடிக்கலாம்,
சருகானாலும் என்ன?!,
சற்றே கண நேர
நெருப்பாக வேண்டும்.

*அழுக்கெதனை
எரித்தாலும்
தீ
தூய்மையானதுதான் .

*மூடிய இமைகளுக்குள்
மட்டுமல்ல,
விழித்திருக்கையிலும்
கனவுதான்,
கனவினை
சுவைத்தே களைத்துப் போனால்
நிஜமாக்கி
மகிழ்வது எப்போது?!

*உலகமெங்கும்
எல்லைக் கோடுகள்,
மனித
மனங்களைப் போலவே,
துண்டு துண்டாய்.,
என்று சேருவது?!
எல்லைகளைக் கடந்து...

*கவலை
பனித் திவலைகளை
நம்பிக்கை சூரியனால்
அழிப்பதை விடுத்து,
பெரு மழையில்
சிறு நெருப்பாய்
அணைந்து போவதேன்?

*சிரிப்பென்பதை
பொருட்காட்சியில்
பார்க்கும்
நிலை வருமோ?!..
அன்பென்பதை
அழியாமல்
காத்துக் கொள்வோம்!

*கருவென்றும்,
குழந்தையென்றும்,
பருவ பறவை என்றும்,
உறவுகளென்றும்,
பிரிவென்றும்,
நோவென்றும்,
சாவென்றும்...,
எத்தனை வேடங்கள்?!...
ஒருத்தருக்கே வாழ்க்கையெல்லாம்

சிறப்பாய் செய்தோமா?!
மனிதமென்று!

*நாவு
தரும் உணவை,
செவி
உண்கிறது.
சில நேரம்,
நாவில் கூர் தீட்டி.,
செவியில் கூர் பார்க்கும்.

இதயங்கள்
அறுந்து விழும்.,
அன்பால் சில.,
ஆணவத்தால் பல.

*வாழ்க்கைச் சட்டம்
சிக்கலானது.
நேர்மையானது.
நாமோ.,
சட்டங்களை மீறியே
பழக்கப் பட்டவர்கள்.
மீறிப் பிறந்தோம்
பல பேர் 
குரங்குகளாக.

*பாவங்களுக்கு
பஞ்சு மெத்தை.,
நல்லவர்களை
ஏமாற்றும் வித்தை.,
என்றே வாழ்ந்துவிட்டு,
புயலடிக்கும் போதுதான்
விழித்துப் பார்கின்றோம்
வானிலை அறிக்கை
கேட்கவில்லையே?!///

*நமக்கு நாமே
நீதிபதி
எனவேதான்
தண்டனையிலிருந்து
தப்பித்து கொள்கிறோம்.!

*அன்பென்பது 
பாவம்.,
பண்பென்பது
கொடியது.,
கல் மனமாய்
பாவத்தால் நிறைகிறோம்.,
கர்வம் பிடித்த
மலைகளெல்லாம்,
பலர் மிதிக்கும்
சாலைகளாகிவிட்டன!


  











சாதி

சாதி
 

சாதி
நீ உன் வாழ்க்கையில் சாதி

சாதிக்க மறந்து உன் வாழ்க்கையில்
நீ செத்தவனாய் ஆகாதே

நிறத்தால் அல்ல
பிறப்பால் அல்ல
பணத்தால் அல்ல
சாதி என்பது

குணத்தால் சொல்லு
நீ உயர்ந்தவன் என்று

சாதி பிரித்து வாழ நீ நினைத்தால்

கீழென்று நீ நினைப்பவன்
சுவாசித்த காற்று
கடந்து வந்த ஆற்று நீர்
நடந்து வந்த பாதை

எல்லாவற்றையும் பிரித்து
உன் சாதி நடந்த பாதையில் மட்டும் நட
நீ உண்மையில் சாதிமான் என
நான் ஏற்று கொள்கிறேன்.!

சாகும் வரை வானம் பார்க்காத
சாக்கடை பன்றி
சாக்கடைதான் உயர்ந்தது என்னுமாம்

வானம் ஒன்று இருப்பதை
அறியும் போது
பன்றிக்கு உயிர் இருக்காது..

நீ சாக்கடை பன்றியா?!!
சாதிக்கும் மனிதனா? 


ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

போ

போ
முதல் ஸ்பரிசம் 
முதல் முத்தம்
முதல் அணைப்பு
முதல் படர்தல்
 எல்லாம் உன்னுடன்  மட்டுமே

வெறும் காமம் பகிரவில்லை
உன்னுடன் நான் 

என்னை பகிர்ந்தேன்
என் உயிரை பகிர்ந்தேன் 

நீயோ
வெறும் உடலை
பகிர்ந்ததாய் கூறி 
விட்டு செல்கின்றாய்

போ .... போ...

நீ என் உயிர்

உயிர் என்றாலே
உடலைவிட்டு போகத்தானே வேண்டும்!



  

சனி, 4 பிப்ரவரி, 2012

இரட்டை வாழ்க்கை

இரட்டை வாழ்க்கை


எனக்கு தெரியவில்லை
இப்படியெல்லாம் வாழ்வதற்கு

என் கை குலுக்களில் உண்மை இருக்கும்
என் அணைப்பில் அன்பு இருக்கும்
என் பார்வையில் கருணை இருக்கும்
என் வார்த்தையில் கடுமை இருக்கும்

எனக்கு தெரியாது
இரட்டை வாழ்க்கை வாழ


கற்றுக்கொள்ளவும்  விரும்பவில்லை
தெரியாதென்ற வார்த்தை எனக்கு பிடிக்காதுதான்
என்றாலும்
இரட்டை வாழ்க்கை வாழ
எனக்கு தெரியாது என்பது பிடித்திருகின்றது!.

ஏமார்ந்து போயிருப்பேன்
யாரையும் ஏமாற்றியது இல்லை

இரட்டை வாழ்க்கை கொடுமையானது

ஒரு கொலையைவிட கொடுமையானது.!

துறவு

துறவு


ஆசையே   துன்பத்தின் வழி.,

புத்தனின் ஆசை.

ஆசை துறக்க சொன்னவனின் ஆசை

ஆசையே துன்பத்தின் வழி.!


எதை துறந்து துறவியாவது?!

உறவுகளை?!
சொத்துக்களை?!
ஆசைகளை?!
உலக நடைமுறைகளை?!

எதை துறந்து துறவியாவது?!

எல்லாம் துறந்து துறவியானாலும்

துறவி என்பதை அணிந்து கொள்கிறோமே?!

துறவி என்ற பட்டம்

அணிவதுதான் துறவோ?!

துறவி என்பதும் துறக்காத வாழ்க்கைதான்!

முற்றும் துறந்தேன்

என்பவனிடம்

துறந்தேன் என்ற சொத்து இருக்கின்றதே !

துறவியையும் துறக்க வழி என்ன?!

இறைவா

உறவு கடந்த வாழ்க்கை கொடு...

துறவு கடந்த வாழ்க்கை கொடு!.






வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

மௌனம்

மௌனம்  ஷோபனா சின்னதுரை

மௌனம் உன் இதழ்களில்
இருக்கின்றது!

உன் விழிகளில் இல்லை!

இதழ் மூடி
இத்தனை வார்த்தைகள்
உன்னால் மட்டுமே
பேச முடியும்!

தொலைபேசி அழைப்புகளில்  கூட
மௌனமாய் நீ இருந்தால்
எங்கனம் அறிவேன் நான்
உன் விழி மொழிகளை?!

ஆனால்,

"உன்னை கடந்து வந்த காற்று சொன்னது
அப்பப்பா அவள் இமை பேசும் வேகத்தில்
எனக்கு மூச்சு முட்டியது
உன்னிடம்தான் அவள்
பேசி கொண்டிருந்தாளோ?!"

மெல்ல சிரித்துக் கொண்டேன்

அவள் இமை  பேசியதையே
தாங்கமுடியாத காற்றுக்குத் தெர்யுமா
அவள் என் இதயத்தில்
பேசிக்கொண்டிருப்பது...