செவ்வாய், 1 ஜூன், 2021

 கண்ணீர் அஞ்சலி

சுவரொட்டி அடிக்க நேரமில்லை.,


வழிவிடவும்

பங்காளிகள் தேவையில்லை..,


உறவுக்கும் - நட்புக்கும்

செய்தியில்லை...,


ஒரு முழப்பூவும்

மேலே விழுவதில்லை ...,


சிறுதுளி கண்ணீரும்

உடல் நனைக்கப் போவதில்லை ...,


வாழ்ந்த வீட்டின் வாசலிலும்

வைத்தெடுக்கப் போவதில்லை...,


இயந்திரம் தோண்டிய பள்ளத்துள்

உறவுகள் முதல் மண் 

தள்ளப்போவதில்லை....


தகனமேடையில் சற்று முன்னெரிந்த

சாம்பலும் அகற்ற நேரமில்லை....,


பெருந்தொற்று மரணங்களுக்கு

பின்னொரு நாளில் அழுதுகொள்ளலாம்,

தனித்து-விலகி வீட்டுக்குள்

உயிர் பிழைத்துக் கிடப்போம்....


ஊரடங்கிற்கடங்கேனென்றால்

வாருங்கள் சற்று

மருத்துவமனை வாயில்களுக்கு,

பிணவறைக்குச் செல்லவும் நேரமின்றி

இடுகாடுகளை நோக்கிச் செல்லும்

நேற்றைய மனிதர்களைக் காணலாம்.


இடுகாடுகளுக்கு வாருங்கள்

எந்த வரிசையிலும் நிற்க விரும்பாதவர்கள்

எரிக்கப்படவும் - புதைக்கப்படவும்

வரிசையிலிருப்பதை காணலாம்.


மருந்தற்ற நோயோ

தவிர்க்க முடியாத நோயோ

இதுவல்ல.....


பெருந்தொற்றின் தொடரறுக்கத் தேவை

முதலில் தனிமை

பின்னர் தேவை

சித்தமும் -ஆயுர்வேதமும்-அலோபதியும்.


அதுவரை 

நாம்

தனித்திருப்போம் - விலகியிருப்போம்

மனித உணர்வுகளை நசுக்கித்தள்ளும்

பெருந்தொற்றின் தலையறுப்போம்.


              - அலெக்சாண்டர் பன்னீர்செல்வம்-

வெள்ளி, 21 மே, 2021

தனிமை 

தனித்திருக்கின்றேன் 
சில காலங்களாக தனித்திருக்கின்றேன் 
சாலையில் - கூட்டத்தில் 
கடைகளில் கூடயில் 
வங்கிகளின் வரிசையில் 
உறவுகளை காணயில் 
நண்பனுடன் கதைக்கையில் 
தனித்திருக்கின்றேன் ....

புன்னகையை புதைத்துவிட்டு 
கரங்களை ஒளித்துக் கொள்கின்றேன் 
தீண்டாமையின் துன்பத்தை 
முழுதாக உணர்கின்றேன்...
நொடிக்கொருமுறை 
அடிக்கொருமுறை 
கைப்பேசியை திறக்கிறேன் 
செய்தி பார்த்து துடிக்கிறேன் ....

அங்காடித் தெருக்களில் 
பெருங்கூட்டத்தின் மத்தியில் 
அமிலத்தின் அண்மையை தவிர்க்க 
ஓடி ஒளிகின்றேன் ...

ஏன் ?!....

பெருந்தொற்றாம் 
ஆட்கொல்லியாம்...
அருகில் நின்றாலே ஆட்கொள்ளுமாம் 
வேண்டாத கடவுளெல்லாம் 
எனக்கு வேண்டாத கடவுள்ளலாம் 
வரமருள வேண்டியும் 
வைத்தியசாலைக்கே வழி சொல்லின...

கருப்பங்காடுகள் எரிவதுபோல 
மனிதர்கள் எரிந்திருக்க ...
அடியாழத்தில் புதைத்திருக்க...
எள்ளி  நகைக்கின்றது "நான்"

தனித்திருக்கின்றேன் 
சில காலங்களாய் 
சொந்த வீட்டுக்குள்ளும் 
தனியறை தனிமையில்.

கைபேசிக்கடவுளின் கருணையால் 
காதருகே வரும் அனைவருக்கும் 
ஒன்றுபோலவே சொல்லுகிறேன் 
தனித்திருங்கள் 
இந்த தனிமையை ஒழிக்க...

காணாக்கடவுள் 
கண்கொண்டு காத்திருக்க வேண்டி 
கண்ணிறைந்த கடவுளாம் 
தூய்மை- சுகாதார பணிசெய்யும் 
கடவுள்களின் கரங்களில் 
நாளை விடியலை விட்டுவிட்டு 
கண்மூட விழைகின்றேன்...

ஆனால் 

கனவும்கூட 
தனிமையைதான் வெளிச்சமிட்டு மிரட்டுகிறது.

விடியட்டும் நாளை 
கூடி களித்திருக்க .....