ஞாயிறு, 1 ஜனவரி, 2012

விடியல்

 விடியல்
 அலெக்சாண்டர் பன்னீர்செல்வம்

2012 
பிறந்து விட்டது
ஒரு வருடத்துடன் இன்னொரு வருடம்,
ஒரு  சூரியன் மறைந்து உதிப்பது போல,
உலகம் சுற்றுவது போல.,
இன்னொரு வருடம் பிறந்து விட்டது.

இன்று வரை
மாற்றம் ஏதும் தெரியவில்லை

மற்றொரு நாள் விடிந்திருக்கின்றது  அவ்வளவே..

இதோ மாலையும் ஆகி விட்டது,
இரவும் வரும் - நாளை  பகலும் வரும்...

ஆனால்,

வருமா ஒரு விடியல் 

என் ஈழத்து மண்ணில்

எம்மக்களுக்கு உரித்தான விடியல்?

சிங்களக் காடையன் 
கை பிடித்திழுக்காத விடியல் வேண்டும்.,
எம் மண்ணில் தன் விதை
விதைத்துவிட்டு போனவனின் தோட்டத்தில்
என் விதைகளை  நடும் நாள் வேண்டும்., 

சிதைந்து போன எம் பிஞ்சுகளின்
முகத்தில் நிரந்தர  ஒளி வேண்டும்.
தாயிழந்து - தந்தை இழந்து
வாழ்விழந்து வாழும் என்
தமிழ் சாதி தலை நிமிர்ந்து வாழும்
பொன் நாள் வேண்டும்,

புது வருடம்-
எத்தனையோ சோதிடர்கள்.,
எத்தனையோ சாமியார்கள்  
யாருமே எங்களின் விடியலை
பற்றி சொல்லவில்லை .

பொடியன்கள் இல்லை
இன்று அனைவருமே பொடியன்களாய்
என்று வெடிப்போமோ 
அன்று ஒரு வேளை விடியுமோ ?!.,
இல்லை எங்கள் வாழ்வு முடியுமோ ?!

வெடிப்போம் ஒரு நாள்
அன்று பிறக்கும் எம்மக்களுக்கு
புது வருடம்!.
ஈழத்தில் தமிழன் இருந்தாலும் சரி
முற்றும் ஒழிந்தாலும் சரி 
 பிறக்கும் எம் மக்களுக்கு  விடியல்     
           

தமிழனென்றால்
எங்கு சென்றாலும் அடிதானா?!

என் உலகே உனக்கு 
நாகரிகம் சொன்னவன் நானல்லவா 
உலக பொதுமறை தந்தவன் நானல்லவா

என்ன செய்யட்டும் இன்றோ
உலகுக்கே எல்லாம் தந்த 
என் தமிழனுக்கு
தண்ணீர் தருவதென்றால் 
எல்லோருக்குமே பிடிக்கவில்லை
தமிழென்று பேசாமல்
திராவிடமென்று பேசினோம் 
தமிழனென்று  கூறாமல் 
இந்தியன் என்று கூறினோம்.,
 ஆனால் தண்ணீர் பெறவே போராடினோம்
சக இந்தியனோடு.,
கன்னட சகோதரன்
காவேரியில்   கழுத்தறுப்பான்.,
சுந்தர தெலுங்கு என்றோம் அவனோ
பாலாற்றில் எம் பல்லுடைப்பான்.,
சரி.. சரி...
நல்லவன் என் மனம் பிடித்த 
மலையாளத்து சகோதரன் என்றால் .,
பெரியாரில் சிறியாராகி
எம்மை அடித்து விரட்டுவான்.,

என்றுதான் எம் மண்ணுக்கு விடுதலை?!

சரி பார்ப்போம் இந்த புத்தாண்டாவது
புதியதை தருகின்றதா என்று

அது வரை எமக்கு
எல்லா ஆண்டும்  ஒரே ஆண்டே!.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக